Saturday, 20 September 2014

திருபுவனம், ஸ்ரீ தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீ கம்பகரேஸ்வரர்



                                     வக்ரதுண்ட  மஹாகாய  சூர்யகோடி சமப்ரப
                                   அவிக்னம் குருமேதேவ சர்வ  கார்யேஷு  சர்வதா!!  
   
                                  
           13.திருபுவனம்:-
      ஈஸ்வரன்  பெயர்:- ஸ்ரீ கம்பகரேஸ்வரர்.( நடுக்கம்  தீர்த்த பெருமான்)
      அம்பாள்  பெயர்:-   ஸ்ரீ தர்மசம்வர்த்தினி, (அறம் வளர்த்த நாயகி)

          கும்பகோணத்திலிருந்து  6 கிலோமீட்டர்  தொலைவிலேயே திருபுவனம்  உள்ளது.இந்த ஊர் சரபேஸ்வரர் கோவிலுக்கும், புகழ்பெற்ற திருபுவனம்  பட்டுப்புடவைகளுக்கும்  பெயர் பெற்றது. நாங்கள்  கோவிலை  அடைந்ததும்  பெரிய பிரகாரத்தையும், சிற்ப வேலைப்பாடுகளையும், தூண்களில் அமைந்துள்ள நேர்த்தியான, அழகுடன் கூடிய அலங்காரங்களையும் கண்டு பிரமித்தோம். மூலவர் இருக்கும் சன்னதியில்  தூண்கள்  அற்புதம். ஸ்ரீ கம்பகரேஸ்வரர்  சுயம்பு லிங்கம். ஸ்ரீ சரபேஸ்வரருக்கு தனி சன்னதி. இக்கோவிலை  மூன்றாம் குலோத்துங்க  சோழன் கட்டியதாக வரலாறு.மிகவும் உயர்ந்த கோபுரம்.ஸ்ரீ கம்பகரேஸ்வரர், வரகுண பாண்டியனின் நடுக்கம் தீர்த்தாராம். ஒரு சமயம் வரகுணபாண்டியன் போருக்கு  செல்லும்போது, அவன் தேரில் ஓர் அந்தணர் அடிபட்டு மடிந்தாராம்.அதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை திருவிடைமருதூர்  ஸ்ரீ மகாலிங்கஸ்வாமி நீக்கினாராம். மறுபடியும் தன்னை பிரம்மஹத்தி தோஷம் பீடிக்குமோ என்ற அச்சத்துடனேயே உடல் நடுங்க பாண்டியமன்னன் திருபுவனம் வந்துசேர்ந்தாராம். அப்பொழுது,இந்த கோவிலில் ஸ்ரீ கம்பகரேஸ்வரர் மன்னனின்  நடுக்கத்தை போக்கினாராம். அதனால் மூலவர் நடுக்கம் தீர்த்த பெருமான் என அழைக்கப்பெற்றார்.இக்கோவிலை தரிசித்தால்  நரம்பு சம்பந்தமான  நோய்கள், கை கால் நடுக்கம்,பயம்  முதலியன நீங்கும். இது 1000 வருடங்கள் பழமையான கோவில்.முதலில் ஸ்ரீவினாயகரை தரிசித்து, பின் கொடிமரத்தை வணங்கி நந்தியை வணங்கி சென்றால் மூலவரை  தரிசிக்கலாம்.            


திருபுவனம் கோவில்
கோவிலின் உள் பிரகார அமைப்பு  


        மூலவருக்கு இடது புறம் தனி சன்னதியில்  அம்பாள்  ஸ்ரீ தர்மசம்வர்த்தினி .தனி கோவிலாகவே அம்பாள் சன்னதி தென்படுகின்றது.   நான்கு கைகளுடன், கீழிரு கைக்ளில் அட்சர  மாலை,அபய ஹஸ்தத்துடனும்,  மேலிரு கைகளில் தாமரைப்பூக்களுடனும் அம்பாள்  காட்சியளிக்கின்றாள்.
            அதற்கு  எதிரிலேயே  ஸ்ரீ சரபர் தனிகோவிலில் அமைந்துள்ளார். மற்ற  கோவில்களில்  தூணில்தான் ஸ்ரீ சரபரைக்காண  இயலும். இங்கு ஸ்ரீ சரபருக்கு  அழகான தூண்கள் தாங்கி நிற்கும் தனி சன்னதி.  ஸ்ரீ சரபேஸ்வரர் யாழி முகம்,மனித உடல், எட்டுகாலகள்,நாலு கைகள்,இரண்டு இற்க்கைகள் கொண்ட பறவை வடிவம்.
ஸ்ரீ சரபரின் முக்கியத்துவம்

,
ஸ்ரீ சரபர் சன்னதி
         ஸ்ரீ நரசிம்ம அவதாரத்தின்  பொழுது, ஸ்ரீ மஹாவிஷ்ணு  ஹிரண்யனை வதம் செய்து அவனது ரத்தத்தை குடித்தார்.அவனை வதம் செய்தபின்பும்  அவரது கோபமும் ஆக்ரோஷமும்  அடங்கவில்லை.இதை அறிந்த தேவர்கள் சிவபெருமானிடம் ஸ்ரீ நரசிம்ம்ரின் கோபத்தை அடக்க வேண்டினர். அதனால் சிவபெருமான்  ஸ்ரீ சரபர் வடிவம் கொண்டு, ஸ்ரீநரசிம்மரை காற்றுமண்டலத்தைத் தாண்டி கொண்டு சென்று,அவர் குடித்த அசுர ரத்தத்தை     நீக்கினார். அந்த அசுர ரத்தம் காற்றுவெளியில் பட்டு தெறித்தால் அக்குணமுள்ள அனேக அசுரர்கள் தோன்றி விடுவார்கள் எனபதால், மிக்க பலமுள்ள பறவையாக ஸ்ரீ நரசிம்மரை ஸ்ரீ சரபர்,மிகவும் அதிக பலத்துடன்

தூக்கிச்சென்றதாக வரலாறு.ஸ்ரீ சரபரின்  சிறகுகளில் ஸ்ரீ பிரத்யங்கரா தேவியும், ஸ்ரீ சூலினி துர்க்கையும்  காணப்படுகின்றனர்.ஸ்ரீ சரபர், சிவன், விஷ்ணு, காளி, துர்க்கை சேர்ந்த வடிவம்.ஸ்ரீ சரபரை வழிபட்டால்,பில்லி, சூனியம்,நரம்பு சம்பந்தமானகோளாறுகள்,பயம் நீங்கும் வியாபார விருத்தி,  திருமணம், மக்கட்பேறு கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் இங்கு ஸ்ரீ சரபருக்கு விசேஷமாக பூஜைகள்,அபிஷேகங்கள்  நடைபெறுகின்றது. 11 வாரங்கள்  தொடர்ந்து சரபருக்கு  பூஜைகள் செய்தால்,பலன் கிடைப்பதாக எல்லோரும் கூறுகின்றனர். அந்த நாட்களில் மக்கள்கூட்டமும் அலைமோதுகிறது. இங்கு ஸ்தல விருக்ஷம் வில்வம். தீர்த்தம் சரபதீர்த்தம். இக்கோவிலின் புராதன பெயர் திருபுவனேஸ்வரம். இராமாயண  மஹாபாரத கதைகள் பற்றிய ஓவியங்கள்  கோவில் முழுவதும் காணப்படுகின்றன. திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கஸ்வாமியை தரிசித்துவிட்டு பின்புதான் இக்கோவிலை தரிசிக்க வேண்டும் என்பது நியதியாம். எங்களுக்கு  இந்த விவரம் தெரியாது. அதனால் இக்கோவிலை தரிசித்தபின்னரே திருவிடைமருதூர்  சென்றோம்.                                                                                               
                                                                    

No comments:

Post a Comment